Stellar Journey

நட்சத்திரப் பயணங்கள் : எளிய தமிழில் வானியல்

மனிதன் நாகரீகம் அடைய முன்பே கற்காலத்தில் இருந்து இன்று வரை விண்வெளி என்பது மனித அறிவுக்கு மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. ஆதியில் மனிதனால் இதனைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட பயத்தினாலும் இயற்கையின் கூறுகளை வழிபடத் தொடங்கினான் என்றும் அதனால் ஏற்பட்டதே சமய நம்பிக்கைகள் என்றும் இன்றும் கருதுபவர்கள் இருக்கின்றனர்.

ஆனாலும் நாகரீகங்கள் மலரத் தொடங்கிய போது கூடவே மனித அறிவியலும் சேர்ந்தே வரலாற்றில் வளர்ந்து வந்துள்ளது. இதற்கு சான்றாக இந்து சமயத்தை எடுத்துக் கொண்டால் வேத காலத்தில் படைப்பின் தோற்றம் எவ்வாறிருந்தது என்ற விளக்கங்களும், சூரியன் பூமிக்கு இடையே உள்ள தூரம், ஒளியின் வேகம் மட்டுமல்லாது  அவர்களது பல வானியல் கணிப்புக்கள் இன்றும் நவீன வானியல் ஆதாரங்களுடன் பொருந்திப் போகின்றன. 

மேலும் கோள்களின் இயக்கங்களை ஆதாரமாகக் கொண்ட இந்துக்களின் ஜோதிட விஞ்ஞானமும், சூரிய சித்தாந்தம், போன்ற அறிவியல் நூல்களும் அவர்களது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. கிரேக்க நாகரீகத்தை எடுத்துக் கொண்டால், தொலைக் காட்டி கண்டுபிடிக்கப் பட முன்பே வானியல் குறித்த வரைபடங்களும், அறிவியல் தொடர்பான தத்துவ விளக்கங்களும் அவர்கள் மத்தியில் இருந்துள்ளன.

இனி நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையில் வானியல் என்றால் என்ன என்று பார்ப்போம். ஜோதிட விஞ்ஞானத்தில் சூரியனும், சந்திரனும் நேராகப் பயணிக்கக் கூடிய நட்சத்திரத் தொகுதிகள் அதாவது ராசிகள் 12 ஆகும். ஆனால் நவீன வானியலில் தற்போது 88 இற்கும் அதிகமான நட்சத்திரத் தொகுதிகள் அடையாளம் காணப் பட்டுள்ளன.

இவற்றில் பல நட்சத்திரத் தொகுதிகள் உருவ அடிப்படையில் பெயரிடப் பட்டாலும் பலவற்றுக்கு பண்டைய நாகரீக அல்லது மத நம்பிக்கை அடிப்படையில் பெயரிடப் பட்டுள்ளன.  இந்த நட்சத்திரங்கள் அவற்றைச் சுற்றி வ̀ரும் கோள்கள் உள்ளடக்கிய அண்டங்கள் (Galaxies) மற்றும் இந்த அண்டங்களுக்கு மத்தியில் இருக்கும் அதிநிறை கருந்துளை, (Super massive Blackhole) சூப்பர் நோவா எச்சங்களான நெபுலாக்கள் (Nebulas) போன்றவை விண்வெளியின் முக்கிய கூறுகளாகும். இவற்றை தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் ஒரு தொலைக் காட்டி மூலம் ஆய்வு செய்யலாம். இதற்கான முதன்மையான தகுதி வான் பொருட்கள் பற்றிய சில அடிப்படை அறிவும், ஆர்வமும் தான்.

இனி வரும் தொடர்களில் நம்மை நாம் எவ்வாறு ஒரு உத்தியோக ரீதியான வானியலாளராக மாற்றிக் கொள்ள முடியும் என்பது தொடர்பில் ஆராய்வோம். இதன் மூலம் இன்று இவ்வாறு சொந்த முயற்சியில் உத்தியோக பூர்வமாக வானை ஆராய்ந்து முழு மனித இனத்தின் அறிவுத் தேடலுக்கும் பங்களிக்கும் சுமார் 30 000 இற்கும் அதிகமான நபர்களுடன் இணைய முடியும்.

வானியலில் முக்கியமான கருவி மற்றும் கூறு ஒளி ஆகும். ஒளியின் பிரகாசம் (magnitude) அடிப்படையாகக் கொண்டு ஒரு நட்சத்திரத்தின் தூரமும், அகச்சிவப்புக் கதிரின் செறிவு அடிப்படையில் ஒவ்வொரு அண்டமும் நம்மை விட்டு விலகிச் செல்லும் வேக அதிகரிப்பும்

இனம் காணப் படுகின்றன. இது தவிர சார்பியல் கோட்பாட்டின் படி வெற்றிடத்தில் ஒளியின் வேகம் நிலையானது மற்றும் எது சார்பாகவும் மாறிலி என்பதும் ஒளியை விஞ்சிய வேகத்தில் எதுவும் பிரபஞ்சத்தில் பயணிக்க முடியாது என்றும் எமக்குத் தெரிய வருகின்றது.

பிரபஞ்சத்தில் பொருட்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகம் என்பதால் அதைக் கணக்கிட ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றோம். வெற்றிடத்தில் ஒளி ஒரு செக்கனில் செல்லும் தூரம் கிட்டத்தட்ட 3000 கிலோ மீட்டர்களாகும். ஓர் ஒளியாண்டின் அளவானது 9460730472580.8 Km என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த தொடரில் பூமிக்கு அருகே இருக்கும் விண்பொருட்களின் இயக்கம் மற்றும் அவற்றை எவ்வாறு தொலைக் காட்டியால் பார்க்க முடியும் என்பது குறித்துப் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *